கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ள 20 காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் இருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத்திற்கு குட்டிகளுடன் கூடிய 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வந்தன. இந்த காட்டு யானைகள் மருதமலை அடிவாரம், பாரதியார் பல்லைக்கழகம், ஐ.ஓ.பி.காலனி, யானை மடுவு உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
நேற்றுமுன்தினம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் முகாமிட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து, யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.