Wednesday, May 29, 2024
Home » தென்னைக்கு இடையே பழமரங்கள் சாகுபடி!

தென்னைக்கு இடையே பழமரங்கள் சாகுபடி!

by Porselvi

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதுபோக மரவள்ளிக்கிழங்கு, வாழை, மா, பலா, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களும், நல்ல மிளகு, ஏலம், கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்த மாவட்டத்தில் பல்வேறு வகையான பழ மரங்களை சாகுபடி செய்யவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தென்னைக்கு இடையே மா, சப்போட்டா உள்ளிட்ட பழ மரங்களைப் பயிரிட்டு அசத்தி வருகிறார் நாகர்கோவில் அருகே உள்ள பழவிளை பகுதியைச் சேர்ந்த ரத்தினசபாபதி. வீட்டைச் சுற்றி தென்னை, தென்னைக்கு இடையே பழ மரங்கள் என திட்டமிட்டு தெளிவாக பயிர் செய்து வரும் ரத்தினசபாபதியைச் சந்தித்தோம். கோடை வெயிலின் சுவடே தெரியாத வகையில் குளு குளுவென்றிருந்த அவரது தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார்.
“கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த காலத்தில் நாட்டு ரக மா மரங்களை சாகுபடி செய்தேன். நாட்டு மா மரம் அதிக உயரத்திற்கு வளரும். அதில் காய்க்கும் மாங்காய் சுவையாக இருக்கும். தற்போது என்னிடம் நாட்டு ரக மரங்கள் குறைவாகத்தான் இருக்கிறது. ஒட்டு ரக மா மரங்களையும் நான் சாகுபடி செய்திருக்கிறேன். இவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மட்டுமே வளரும். எனக்கு பழவிளை, கீழசங்கரன்குழி, கிடங்கன்கரைவிளை ஆகிய பகுதிகளில் 120 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் 90 தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னைகளுக்கு இடையே காளப்பாடி, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த், பெங்களூரா, கட்டிமான் ரக மா மரங்களை சாகுபடி செய்திருக்கிறேன்.

இது தவிர சப்போட்டா மரங்களையும் சாகுபடி செய்திருக்கிறேன். பழவிளையில் உள்ள தோட்டத்தில் எனது வீடும் அமைந்திருக்கிறது. வீட்டைச் சுற்றி கொய்யா, முந்திரி மரம், நல்ல மிளகு, ஆப்பிள் சாம்பே உள்ளிட்ட மரங்களையும் வளர்த்து வருகிறேன். மா மரங்கள் ஜனவரி மாதத்தில் பூக்கத் தொடங்கும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் காய், பழங்களை அறுவடை செய்யலாம். தென்னை மரங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து வருகிறேன். தென்னை, மா, சப்போட்டா உள்ளிட்ட அனைத்து மரங்களுக்கும் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுச்சாணத்தை மட்டுமே உரமாக வைக்கிறேன். வருடத்திற்கு உரச்செலவு ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. அதன்பிறகு எந்த வித மருந்தோ, உரங்களோ பயன்படுத்துவது இல்லை. மா மரத்தில் அறுவடை முடிந்த பிறகு கவாத்து செய்துவிடவேண்டும். இதுபோல் சப்போட்டாப் பழங்களை பறித்துவிட்டு கவாத்து செய்துவிடுவேன். சூரிய வெயிலானது மரத்தின் எல்லா பாகத்திலும் விழும்படி கவாத்து செய்து விடுவேன். நான் சாகுபடி செய்துள்ள பெங்களூரா மரத்தில் இருந்து கிடைக்கும் மாங்காயை மட்டும் விற்பனை செய்வேன். மற்ற ரக மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களை எங்களின் பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்வோம். மீதமுள்ள பழங்களை உறவினர்களுக்குக் கொடுத்து விடுவேன். அறுவடை ெசய்துவிட்டு கவாத்து செய்யும்போது மா மரத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். வீட்டின் அருகே சாகுபடி செய்துள்ள 2 முந்திரி மரத்தில் இருந்து முந்திரிப்பழம் மற்றும் முந்திரி பருப்பு கிடைத்து வருகிறது. நல்ல மிளகு செடிகளையும் நடவு செய்திருக்கிறேன். அதில் இருந்து கிடைக்கும் நல்ல மிளகை எங்களது வீட்டுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டு, மீதியை
விற்பனை செய்கிறேன்.

வீட்டைச் சுற்றி அதிகமான இடம் இருப்பதால் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறேன்.என்னிடம் 50 நாட்டுக்கோழிகள் உள்ளன. கோழிகள் மூலம் நாட்டு முட்டைகள் கிடைத்து விடுகிறது. ஒரு முட்டை ரூ.14 என விற்பனை செய்கிறேன். இப்படி பல்வேறு பயிர்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. பயிர்களுக்கு வைக்கப்படும் உரம் மற்றும் சொந்த செலவு போக வருடத்துக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் கிடைக்கிறது. நான் சரியாக வருவாய் எவ்வளவு கிடைக்கிறது என கணக்கீடு செய்வது இல்லை. எங்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது. அதுபோக செலவுக்குப் பணமும் கிடைக்கிறது. இது போதும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ரத்தினசபாபதி:
98658 23970.

You may also like

Leave a Comment

twenty − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi