அரக்கோணம்: சென்னை அத்திப்பட்டு பகுதியில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. இந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும்போது எதிர்பாராத நிலையில் ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து குபுகுபுவென தீ புகை கிளம்பியது. இதுகுறித்து அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீ புகையுடன் வரும் சரக்கு ரயிலை தனியாக 6வது பிளாட்பாரத்தில் நேற்று அதிகாலை 3:10 மணி அளவில் நிறுத்தினர். பின்னர், அந்த ரயில் பெட்டியில் தீ மற்றும் புகை வந்ததை சோதனை செய்தனர். அப்போது, 8வது பெட்டியின் அடிப்பகுதியில் நிலக்கரியில் இருந்து தீ பற்றி எரிவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டியை தனியாக துண்டித்து, உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.