மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் ஆகியோரின் பதவிக்காலம் உலககோப்பை தொடருடன் முடிந்தது. இந்நிலையில் இவர்களின் பதவி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ராகுல்டிராவிட் கூறியிருப்பதாவது: பதவி நீட்டிப்பு வழங்கிய பிசிசிஐக்கு நன்றி. பயிற்சியாளர் என்றால் வீட்டை விட்டு நீண்ட காலம் தள்ளி இருக்க வேண்டும், ஆகவே, எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும், அவர்களது பொறுமையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். .உலகக் கோப்பைக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கடும் சவால்கள் உள்ளன. ஆனால், சிறப்பானவற்றை தொடர்ந்து செய்வதற்கான எங்களது நாட்டம் குறையவே குறையாது” என்று கூறினார்.
இதனிடையே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்பட்டுள்ளதை முன்னாள் வீரர் கம்பீர் வரவேற்றுள்ளார். ”இது ஒரு நல்ல விஷயம், ஏனென்றால் டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால், பயிற்சியாளர்களை யாரும் மாற்ற விரும்பவில்லை. அதை ராகுல் ஏற்றுக்கொண்டது நல்லது. இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, நல்ல கிரிக்கெட்டை விளையாடும் என நம்புவோம், என தெரிவித்துள்ளார்.