பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் விரைவில் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் பாஜ. கூட்டணியில் இருந்து விலகிய முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்க நிதிஷ் பெரிதும் துணையாக இருந்தார்.
இந்நிலையில், நிதிஷுக்கு மிகவும் நெருங்கியவரும் ஜனதா தளத்தின் தலைவருமான ‘லாலன்’ என்று அழைக்கப்படும் ராஜிவ் ரஞ்சன் சிங், நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ள ஐ.ஜ.த. செயற்குழு மற்றும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பதவியில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் காட்டும் நெருக்கத்தினால், நிதிஷ் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உள்கட்சி பூசல் எதுவும் கிடையாது. இது போன்ற செய்தி எதையும் கேள்விப்படவில்லை என்று கட்சி வட்டாரத்தில் மழுப்பலாக பதில் கூறப்படுகிறது.