ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். பாரதிய ஜனதா கட்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்தார். இவர் இரண்டு மாதத்திற்கு முன்பு கலைஞர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்த ரவிசங்கரை நேற்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை ராமநாதபுரம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.