திருவள்ளூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் நாள் மொழிப்பாட தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் 478 பேர் எழுதவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10ம் வகுப்பு முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 33,814 மாணவர்களில் 33,302 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 478 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இவர்களில் 540 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் மூலம் மொழிப்பாட தேர்வினை எழுதினர். தேர்வினை கண்காணிக்கும் வகையில் 52 பறக்கும் படை கண்காணிப்பாளர்களும், ஒரு மையத்திற்கு ஒரு நிலையான கண்காணிப்பாளரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பொதுத் தேர்விற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 13 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 37 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர் உதவியுடன் வாகனம் மூலம் 138 தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திருவள்ளூர் ஆர்எம் ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி அலுவலர் பாலமுருகன், தலைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.