கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கிரானைட் கற்களை பாலீஸ் செய்தபோது, தூசி பறந்து அப்பகுதியில் மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் வீடுகளில் படிந்துள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜன் நேற்று முன்தினம் விசாரிக்க சென்றபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரவில் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த இருதரப்பினரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்தவரின் வீட்டின் கூரை தடுப்பிற்கு தீ வைத்தனர். இதுபற்றிய புகாரின்படி அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.