ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட 2 கண்ணாடி மாளிகையில் பெரணி (பூக்காத இனம்) தாவரங்கள் மற்றும் பல்வேறு வகை கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. 2 கண்ணாடி மாளிகையும் வலுவிழந்து சேதம் அடைந்ததால் மேற்கூரைகளில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது விழுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி இந்த 2 கண்ணாடி மாளிகைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. பின் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பெரணி இல்லம் மட்டும் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
எனினும் மீண்டும் கண்ணாடிகள் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மீண்டும் நேற்று முதல் இந்த கண்ணாடி மாளிகை மூடப்பட்டது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரணி இல்லத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.