சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதையறிந்த இந்து முன்னணியினர் கடந்த 17ம் தேதி சென்று, அங்கிருந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அனைவரும் சென்று விட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும், தன் குடும்பத்தினருடன் ஜெபம் செய்துள்ளார். அப்போது 30 பேர் கும்பல், கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்திருக்கின்றனர். ஜெபம் முடிந்து வந்த 6 பேர் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்தினர்.
இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஒருவர் தன் வீட்டில் மத வழிபாடு செய்வது அவரது விருப்பம். தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. மதவெறி கூட்டத்தின் இத்தகைய நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் காவி கும்பலின் மதவெறி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் திட்டமிட்டு மத கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.