சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரிகை பகுதியைச் சேர்ந்தவர் சம்பங்கி மகன் கார்த்திக்(38). திமுக பிரமுகரான இவர், காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கர்நாடக மாநிலம் அனிகிரிப்பள்ளி பகுதியில் வசித்து வரும் கார்த்திக்கின் உறவினர் ஒருவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, கார்த்திக் அடிக்கடி அனிகிரிப்பள்ளி சென்று, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நிலம் தொடர்பான வழக்கில், கார்த்திக்கின் உறவினருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதாக தெரிகிறது.
இதையடுத்து, நேற்று முன்தினம் அனிகிரிப்பள்ளி சென்றுவிட்டு கார்த்திக், நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மாலை 5 மணியளவில் ஓசூரை தாண்டி, பேரிகை அருகே சூலகுண்டா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில், சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அனிகிரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணப்பா மகன் பிரதாப்(30) உள்பட 3 பேர், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கார்த்திக்கை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.