Thursday, May 2, 2024
Home » சித்தூர் அடுத்த முருக்கம்பட்டில் 10 ஏக்கரில் குப்பைகளின் தரம் பிரிக்க நவீன கிடங்கு அமைக்கப்படும்

சித்தூர் அடுத்த முருக்கம்பட்டில் 10 ஏக்கரில் குப்பைகளின் தரம் பிரிக்க நவீன கிடங்கு அமைக்கப்படும்

by Lakshmipathi

*மாநகராட்சி ஆணையர் தகவல்

சித்தூர் : சித்தூர் அடுத்த முருக்கம்பட்டில் 10 ஏக்கரில் குப்பை கழிவுகளை மூன்று அடுக்குகளாக பிரிக்க நவீன கிடங்கு அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
சித்தூர் மாநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மூன்று அடுக்குகளாக பிரிக்க புதிதாக சுத்திகரிப்பு நிலையம் 10 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சித்தூர் மாநகரம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நாள்தோறும் மாநகரம் முழுவதும் உள்ள குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் மாநகரத்தில் 2 இடங்களில் உள்ள கிடங்குகளில் சேமித்து தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மேலும், குப்பை கழிவுகளால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் புகாரை ஏற்று அரசு சித்தூர் அடுத்த முருக்கம்பட்டு 50வது வார்டில் குப்பை கழிவுகளை கொட்டி சுத்திகரிப்பு செய்ய கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட உள்ள குப்பை கிடங்கில் மூன்று அடுக்குகளாக குப்பை கழிவுகள் பிரிக்கப்பட்ட உள்ளது. அதில், பாட்டில்கள், கண்ணாடிகள், இரும்பு வகைகள் உள்ளிட்டவை தனியாகவும், பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள், மக்காத குப்பைகள் உள்ளிட்டவை தனியாகவும், மக்கும் குப்பைகளை தனியாக பிரிக்க அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த குப்பை கழிவை பிரித்தெடுக்கும் நிலையத்தில் பொதுமக்களுக்கு துர்நாற்றம் போன்ற எந்த விளைவுகளும் ஏற்படாத வகையில் அமைக்கப்படஉள்ளது. ஆகவே சித்தூர் மாநகர பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் மாநில அரசு 50 சதவீதமும், மத்திய அரசு 50 சதவீதமும் முதலீட்டில் இந்த அதிநவீன குப்பைகளை பிரித்தெடுத்தும் இயந்திரங்கள் அமைத்து, ஓரிரு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த கிடங்கில் விவசாயிகளுக்கு தேவையான உரம், பொதுமக்களுக்கு வழங்க மின்சாரம் உள்ளிட்டவை தயாரிக்க அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

nine − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi