சித்தூர் : சித்தூர் மாநகராட்சி சார்பில் 18வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் படி கல்லூரிகளில் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சித்தூர் மாநகராட்சி சார்பில் 18 வயதில் நிரம்பியவர்கள் வாக்களிக்கும் படி சித்தூர் மாநகரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அருணா கூறியதாவது: இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் 18 வயதில் நிரம்பியவர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.
இளைஞர்களிடையே வாக்களிக்கும் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்குரிமை பதிவு செய்தல் மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இலவசமாகப் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் சித்தூர் மாநகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், எஸ்விஇஇபி திட்டங்களின் ஒரு பகுதியாக, இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி வளாகத்தில் பாகுபலி செல்பி கட்அவுட்கள் நிறுவப்பட்டன.
வாக்காளர் அடையாள அட்டையை தோளில் சுமந்தபடி பாகுபலியின் செல்பி கட்அவுட்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இளைஞர்கள் ஆர்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களது வாக்களிக்கும் உரிமையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
அவர்கள் தங்களது முதல் வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாக கூறுகின்றனர். எனவே வரும் தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேனர்கள் அமைக்கப்பட்டதால் கல்லூரி மாணவ, மாணவிகள் புகைப்படம் செல்பி எடுத்துச்சென்றனர்.