செய்யூர்: சித்தாமூர் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து வீட்டின் கேட்டுகள் உடைத்து, 2 பைக்குகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சித்தாமூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (43). இவரது, வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு கேட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டு வாசலில் இருந்த பைக்கை திருடிச்சென்றனர். அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் (40). வீட்டின் வாசலில் நிறுத்தி யிருந்த பைக்கை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போலீசார், ரோந்து பணி மேற்கொள்ளாததே திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்களிடையே குற்றசாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையம் பகுதியிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.