சென்னை: சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து சீனாவில் தற்போது புதிய வகை நிமோனியா காய்ச்சல் என்பது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பரவக்கூடிய புதிய தொற்றானது குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகமாக பாதிக்கும் என்று கருதப்படுவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, போதுவான ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. நிமோனியா நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.