பெய்ஜிங்: சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் இருந்து சுமார் 1000 பயணிகள் 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சீனாவின் பெய்ஜிங் பகுதியில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. 5 நாட்கள் தொடர்ந்த மழையால் வட சீனாவில் பல இடங்கள் வெள்ளக்காடாகின.
ஜூலை 30ம் தேதி குஹாப் பகுதியிலிருந்து பெய்ஜிங் நோக்கி ரயில் ஒன்று சென்றுள்ளது அந்த ரயில் செல்லும் வழித்தடத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மேலும் பலத்த காற்று நிலச்சரிவு உள்ளிட்டவையால் தண்டவாளத்தில் மரக்கிளைகள் விழுந்து சேதமடைந்திருந்தது. இதனால் அந்த ரயில் பௌஇங்லி என்ற நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அங்கு வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரயிலுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு ரயிலிலேயே உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் அவர்கள் ரயிலிலேயே இருந்த நிலையில் அடுத்தநாள் வெள்ளம் குறைந்த உடன் அருகில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இருந்தும் தங்கள் வீடுகளுக்கு செல்லமுடியாமல் அவர்கள் தவித்தனர். அருகில் இருந்த ஆற்றுநீரின் அளவு அதகிகரித்திருந்து வெள்ளம் ஏற்பட்டிருந்ததால் மீட்புக்குழுவினர் அங்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி மீட்புக்குழு வந்த பிறகு இரண்டு நாட்கள் சிறு சிறு பிரிவுகளாக பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.