ஜம்மு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பிறகு நீக்கப்பட்ட பதிவை ராணுவம் மீண்டும் வெளியிட்டது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துருவா கமாண்ட் பதிவிட்டிருந்தது. இதனை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
அதில் கோவிட் தொற்றின் போது நிலைமையைக் கையாள்வது உட்பட அவரது 38 ஆண்டுகால நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்தவர் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா என்று வாழ்த்தி இருந்தது. இதேபோல் கன்னியமாகுரி மாவட்டத்தில் இருந்தும், ஏன் தமிழ்நாட்டில் இருந்து ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக உயர்ந்த முதல் பெண் என்றும் பாராட்டி இருந்தது. தொடர்ந்து, தமிழ்நாட்டை சேர்ந்த முதல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற இக்நாடியஸுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
முதல்வர் வாழ்த்து தெரிவித்த நிலையில் இக்நேசியஸ் பதவி உயர்வு தொடர்பான பதிவு வடக்கு மண்டல ராணுவ பக்கத்தில் நீக்கப்பட்டது. பதிவு நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். பதிவு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ராணுவத்துக்கு சென்னை மண்டல பாதுகாப்புத்துறை பிஆர்ஓ கடிதம் எழுதியிருந்தார். எதிர்ப்பு வலுத்ததால் பெண் அதிகாரி பதவி உயர்வு பற்றிய பதிவு பாதுகாப்புத்துறை தலைமை அலுவலக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துவதாக ராணுவ அதிகாரிகள் தலைமையகம் ட்வீட் செய்துள்ளது.