Monday, June 17, 2024
Home » கிராமப்புறங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 2500 கோயில்களில் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம்: ரூ.50 கோடிக்கான வரைவோலை முதல்வர் வழங்கினார்

கிராமப்புறங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 2500 கோயில்களில் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம்: ரூ.50 கோடிக்கான வரைவோலை முதல்வர் வழங்கினார்

by Francis

சென்னை: கிராமப்புறங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 2500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் என ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்தந்த கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த கோயில்களை பழமை மாறாமல் புனரமைத்து குடமுழுக்கு நடத்துதல், குள திருப்பணி, தேர் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை எடுத்து வருகிறது. சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. 2021-22ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் தலா 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கிராமப்புற திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்படி கிராம பகுதிகளில் அமைந்துள்ள 1,250 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் தலா 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 5ம்தேதி சென்னை, வில்லிவாக்கத்தில் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை வழங்கினார். இதை தொடர்ந்து, 2022-23ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2 லட்சத்திற்கான வரைவோலைகளை வழங்கினார். இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi