பெரம்பூர்: கொளத்தூர், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி முழுவதும் கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளன. எனவே மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, தற்போது சுமார் 50 இடங்களில் சாலைபோடும் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் ரூ.13.95 லட்சம் செலவில் நடைபெறும் தெற்கு அவென்யூ சாலை சீரமைப்புப் பணியை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்றுமுன் தினம் நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் இந்தச் சாலை தரமானதாகவும், அரசின் விதிகளின்படி முறையாக அமைக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்த இறையன்பு, தார் – ஜல்லி கலவையின் விகிதம், தன்மை, வெப்பம், அடர்த்தி போன்றவை சரியாக உள்ளதா என்றும், பழைய சாலைகள் மில்லிங் செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளதா என்றும் விரிவாக ஆய்வு செய்தார். இதுகுறித்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி அலுவலர்களிடமும், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடமும் அவர் கேட்டறிந்தார். இதேபோன்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரமணா நகர் இளங்கோ தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்புப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வட்டாரத் துணை ஆணையர் அப்துல் ரகுமான், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் நேருகுமார், திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.