விருதுநகர்: விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் அமராவதி அம்மாள் அவர்களின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி. அமராவதி அம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.” இவ்வாறு முதல்வர் விடுத்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர்கள் பலரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.