Tuesday, May 28, 2024
Home » முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் மாற்றுத்திறனாளி மாணவன்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் மாற்றுத்திறனாளி மாணவன்

by Dhanush Kumar

திருவொற்றியூர்: முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனை அமைச்சர் காந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். எண்ணூர் காமராஜ் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அயாத்பாஷா. இவரது மனைவி சரிபா. இவர்களது மகன் அப்பாஸ், எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பாஸ் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. ஆனாலும் மற்ற மாணவர்களைப் போல் அப்பாஸ் விளையாட்டிலும், படிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விளையாட்டில் சாதனை புரிய வேண்டும் என்ற உறுதியோடு, பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் பல்வேறு போட்டியில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி திருவள்ளூரில் நடந்தது. இதில் பங்கேற்ற அப்பாஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்பாசுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர். எனவே தேசிய, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று அவன் தங்கம் வெல்வான் என்று அவரது பெற்றோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi