*ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம்
ராமநாதபுரம் : ராமநாாதபுரத்தில் நடந்த விழாவில் வருவாய் துறையின் மூலம் 4,058 பேருக்கு ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்மக்களை காக்கும் அரணாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார் என தெரிவித்தார்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 3,967 பேருக்கு ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், கதர் கிராம தொழில்கள் வாரிய துறையின் மூலம் 91 பேருக்கு ரூ.19 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச மின்விசை சக்கரம் இயந்திரங்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் ரூ.40.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து, கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததையொட்டி ராமநாதபுரத்தில் முதல்கட்டமாக 4,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பொருத்தவரை பின்தங்கிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். வறுமையில் உள்ள மக்களுக்கு நீண்ட காலமாக தனக்கென சொந்தமாக வீட்டுமனை இல்லாமல்.
சொந்த வீடு கட்ட முடியாமல் இருந்து வந்த எண்ணற்ற மக்களின் கனவை நினைவாக்கும் வகையில் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இதன்மூலம் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு தனக்கென ஒரு சொந்த வீடு கட்டும் நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடு கட்டும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ராமேஸ்வரம் வந்திருந்த போது வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை முதலமைச்சர் தனிக்கவனம் எடுத்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். .மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு வழங்கி வைகை ஆற்று கால்வாய் மற்றும் கமுதி வட்டத்தில் பல்வேறு ஆறுகள், ஏரிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது உங்களை தேடி உங்கள் ஊரில் என்னும் திட்டம் துவங்கப்பட்டு மாவட்ட கலெக்டர் மூலம் கிராம பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கோரிக்கை நிறைவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.மேலும் நீங்கள் நலமா எனும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து அரசு வழங்கிய எண்ணற்ற திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். அதேபோல் அனைத்து அமைச்சர்களும், மாவட்ட கலெக்டர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறியும் போது அனைத்து பயனாளிகளும் மன மகிழ்வுடன் சிறப்பாக பயன்பெற்று வருகிறோம் என தெரிவித்தார்கள்.
இப்படியாக எண்ணற்ற திட்டங்களை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வழங்கி பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முதலமைச்சர் சிறப்பாக திட்டங்களை வழங்கி முதன்மை முதல்வராக இருந்து வருகிறார். இத்தகைய அரசு அனைவரையும் அரவணைக்கும் அரசாக இருந்து வருகிறது. பொதுமக்களாகிய நீங்கள் தங்களின் தேவைக்கேற்ற திட்டங்களை பெற்று பொருளாதார முன்னேற்றத்துடன் வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.