நொய்டா: சட்டீஸ்கர் மாநிலத்தில் மதுபான விற்பனையில் ரூ.2000 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி அனில் டுட்டேஜா,கலால்துறை சிறப்பு செயலாளர் அருண்பதி திரிபாதி, கலால்துறை ஆணையர் நிரஞ்சன் தாஸ், தொழிலதிபர் விது குப்தா, ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் அன்வர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், அருண்பதி திரிபாதி, அன்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டீஸ்கர் மதுபாட்டில்களுக்கு சட்டவிரோதமாக ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையின் துணை இயக்குனர் அளித்த புகாரின்படி உபி, நொய்டா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 80 கோடி ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் தயாரித்து வழங்குவதற்கு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நொய்டா போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘இது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.