செய்யூர்: செய்யூர் இசிஆர் சாலை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் எதிரே வந்த ரெடிமேடு சிமென்ட் கலவை லாரிமீது பைக் மோதியது. இதில், பைக்கில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து லாரி டிரைவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (24). இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த கவுதம் (29). இருவரும் கூலித்தொழிலாளிகள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நேற்றிரவு 10 மணியளவில் ஒரே பைக்கில் செய்யூரில் இருந்து இசிஆர் சாலை எல்லையம்மன் கோயில் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எல்லையம்மன் கோயில் அருகே எதிர்பக்கத்தில் வந்த ஒரு தனியார் ரெடிமேடு சிமென்ட் கலவை லாரிமீது ராமமூர்த்தி ஓட்டிவந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.
இவ்விபத்தில் ராமமூர்த்தி, கவுதம் ஆகிய இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செய்யூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இருவரின் சடலங்களை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து லாரி டிரைவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.