சென்னை: சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கரில் அமையவுள்ள நகர்ப்புற பொது சதுக்கம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர். திட்டமிடாமல் அமைத்ததால் ஒதுக்கீடுசெய்ததை விட கூடுதலாக 25%தொகை செலவிடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் மழை பெய்தால்கூட தண்ணீர் தேங்குவதால் 13 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ. 50 கோடி செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விளையாட்டு பொழுது போக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சி கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக் கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். வரும் ஆண்டில் ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.