Sunday, September 1, 2024
Home » சென்னையில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது; ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

சென்னையில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது; ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

by Suresh

சென்னை ஜன.8: சென்னையில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஜனவரி 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். விழாவுக்கு இடையே, ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ்., வின் பாஸ்ட் உள்பட 12 பெரிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.57,354 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதைத் தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டது என தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.மேலும், மாநாட்டில் தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, க்வால்காம் டிசைன் சென்டர் மற்றும் பஸ்ட் சோலார் நிறுவனங்களின் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, கோத்ரேஜ் நிறுவனத்தின் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, விழாவில் ஜப்பான் நாட்டின் கோச்சி மாகாண கவர்னர் ஹமாதா செய்ஜி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் தினேஷ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால், கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா கோத்ரேஜ், டி.வி.எஸ். நிறுவன தலைவர் எமரிட்டஸ் வேணு சீனிவாசன் ஆகியோர் பேசினர். ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி காணொலிக்காட்சி வழியாக பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உலக அளவிலான முதலீட்டாளர்களை வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த 2 நாள் மாநாட்டில் மூலதனம் நிறைந்த மின்னணு பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் பி.வி. செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும். அதன் மூலம் இந்திய பொருளாதாரமும் உயரும்” என்றார்.

ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “தமிழ்நாடு இலக்காக வைத்திருக்கும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் உயர்ந்த இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும் போது, நாட்டில் அதிகப் பொருளாதாரம் கொண்ட 2வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு தொழில் பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. 45 ஆயிரம் தொழிற்சாலைகள் இங்கு இருக்கின்றன” என்றார்.

மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அலுவலர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க விழா முடிவுற்றதும், 8 அரங்கங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடந்தன. இதில், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசினர். தொழில் கண்காட்சியில் தொழில் பிரிவு அரங்கம், சுற்றுச்சூழல் அரங்கங்கள், சர்வதேச மற்றும் ஸ்டார்ட் அப் அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2வது நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அங்குள்ள 8 அரங்கங்களில் 18 தலைப்புகளின் கீழ் கருத்தரங்கம் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடக்கிறது. இதற்கு தலைமை தாங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை தொழில் நிறுவனங்கள், எவ்வளவு தொகை முதலீடு செய்தது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிவிப்பார். உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

5 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi