ஒடிசா: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோரில் கோரமண்டல் ரயில் விபத்திற்குள்ளானது. 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்கவும், அவர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவாது ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழு இரண்டு குழுக்களாக பல்வேறு பகுத்திகளில் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் அளித்தும் மேலும் விபத்து தொடர்பாக விபரங்களை சேகரித்து உடனுக்குடன் தமிழ்நாடு அரசிற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒடிசா சென்ற அமைச்சர்கள் குழு நேற்று தமிழ்நாடு திரும்பிய நிலையில், மற்றொரு குழுவான பணிந்தர ரெட்டி, குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அடங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று இரவு தமிழ்நாட்டிற்கு திரும்புகின்றனர்.
ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரில் கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்து, நாளை காலை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஒடிசாவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட விபரங்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்த விபரம் ஆகியவை கொண்ட அறிக்கையை நாளை சமர்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.