சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலைய துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். 2022-2023ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும்.
இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2022-2023ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 500 திருமணங்களும், 2023-2024ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 600 திருமணங்களில் 564 திருமணங்கள் என மொத்தம் 1,064 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து நேற்று திருக்கோயில்கள் சார்பில் பிற மாவட்டங்களில் 34 மணமக்களுக்கும், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 மணமக்களுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.
இதன்படி மொத்தம் 1,100 திருமணங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.