தண்டையார்பேட்டை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் வடசென்னை பகுதியை மேம்படுத்த உத்தர விட்டிருந்தார். அதனடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையுள்ள கடற்பகுதியை அழகுபடுத்த முடிவு செய்து பல்வேறு பிரிவுகளாக பணிகளை ஒதுக்கியது. அதன்படி ₹5.5 கோடி செலவில் சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் 3 மீட்டரில் நடைபாதையும், அரை மீட்டரில் சாலையோர பூங்காவும் நடைபெற உள்ளது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.
இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் தேவி, குமாரி, பகுதி செயலாளர் லட்சுமணன், வழக்கறிஞர் மருது கணேஷ் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதுபோல் திருவொற்றியூர் பகுதியில் 1.9 கிமீ தூரத்தில் 34 கோடி செலவில் கடற்கரை அழகுபடுத்தும் பணியை திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.