சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு டிக்கெட் தர மறுத்த அரசு விரைவுப் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் நடைமேடை 5ல் நேற்றுமுன் தினம் இரவு 11.30 மணியளவில் மதுரைக்குச் சென்ற பேருந்தில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா என்பவருக்கு பேருந்து நடத்துனர் ராஜா என்பவர் டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, எதற்காக எனக்கு டிக்கெட் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை சிவா தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, அதற்கு நடத்துனர் நீ வீடியோ எடுத்தால் எனக்கு என்ன பயமா என்று கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார், அங்கு விரைந்து வந்து சிவாவை சமதானப்படுத்தி மதுரைக்கு வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பின்னர் மதுரைக்குச் சென்ற சிவா, இதுகுறித்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய மேலாளரிடம் வீடியோஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன்படி நடத்துனர் ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து சிவா ஒரு வீடியோவை வெளிட்டு பேசி உள்ளார். அதில், மதுரைக்குச் செல்லும் பேருந்தில் பயணிக்க நான் வந்தேன்.
அதில் இருந்த அரசு விரைவுப் பேருந்து நடத்துனர் ராஜா என்பவர் டிக்கெட் கொடுக்காமல் எனக்கு அவமதிப்பு ஏற்படுத்தினார். நான் மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் அவர் இப்படி செய்தார். அதேபோல் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என எனது ஐடி கார்டை காண்பித்தும் என்னை மிரட்டும் விதமாக அவர் பேசினார். இதுபோன்று கண்பார்வை இல்லாதவர்கள், காது கேட்காதவர்களுக்கு இந்த பேருந்தில் டிக்கெட் வழங்க மறுக்கப்பட்டால் அவர்களது கதி என்ன என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் என்னை அவமதித்த நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.