சென்னை: சென்னையில் கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்து 15 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 57.6 கிலோ கஞ்சா, 2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 797 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,749 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 853 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 64 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.