சென்னை: சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேர்ந்த ராகுல் என்பவர் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறுதுறையில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக ராகுல் மற்றும் அவரது 4 நண்பர்களுடன் அண்ணா சாலையில் உள்ள பிரபல தனியார் மாலுக்கு எதிரே உள்ள லாட்ஜ்ல் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராகுல் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அண்ணா சாலை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராகுல் அறையில் தங்கியிருந்தபோது போதை பவுடரை நீரில் கலந்து ஊசி மூலம் போட்டுக்கொண்டதால் அவர் உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அறையில் இருந்த ராகுலின் நண்பர்களை போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்ன்றனர்.