சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்த போதிலும் பல இடங்களில் மழைநீர் தேங்க வில்லை. இதை அரசாங்கம் சிறப்பாக கையாண்டுள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பாராட்டினார். சென்னை அமமுக தலைமையகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், துணை பொது செயலாளர் ஜி.செந்தமிழன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நவம்பர் – டிசம்பர் மாதங்களில் முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, அமலாக்கத்துறை கடமையை செய்துள்ளது. ஓபிஎஸ்சும் நானும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். மீண்டும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக பேசுவோம். தொடர் மழையில் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்க வில்லை. இதை இந்த அரசாங்கம் சிறப்பாக கையாண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.