Tuesday, May 21, 2024
Home » சென்னை – பெங்களூரு விரைவு சாலை அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்: தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை – பெங்களூரு விரைவு சாலை அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்: தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

by Karthik Yash

* சிறப்பு செய்தி
சென்னை – பெங்களூரு இடையே 262 கி.மீ. நீளத்திற்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அடுத்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் வணிக போக்குவரத்து, சுற்றுலா, மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளை அமைத்து, அதனை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலங்களும் அந்தந்த மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை, மாநிலத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக இலக்கை அடைய பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாகவும், மாநில அரசுடன் இணைந்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெரு நகரங்களான சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 262 கி.மீ. நீளத்திற்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 26 இடங்களில் இது போன்ற பசுமை வழி விரைவு சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது. அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும். சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது.

அதாவது, சென்னை, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு 372கி.மீ. நீளமுள்ள என்.எச் 48 தேசிய நெடுஞ்சாலை, அதேபோல கோயம்பேடு, பெரும்புதூர், சித்தூர், ஓசகோட்டே வழியாக பெங்களூருவுக்கு 335கி.மீ. நீளமுள்ள என்.எச்.75 தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் விரைவு சாலை இந்த இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமையவுள்ளது. பெங்களூருவுக்கு வெளியே உள்ள ஓசகோட்டே மற்றும் சென்னைக்கு வெளியே உள்ள பெரும்புதூர் இந்த விரைவு சாலையின் நிறைவு இடங்களாக இருக்கும்.

ராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாளையம், பலமனேர், கோட்டா, வெங்கட்டகிரி, கோளார், பங்கார்பெட், மாலூர் வழியாக இந்த விரைவு சாலை செல்கிறது. தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 2 முதல் 3 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விரைவு சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது, தமிழ்நாட்டில் 85 கி.மீ. நீளமும், ஆந்திராவில் 71 கி.மீ. நீளமும், கர்நாடகாவில் 106 கி.மீ. நீளமும் சாலை அமைகிறது. ரூ.17,930 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரைவு சாலை 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 8 வழிச்சாலையாகவும் மாற்றும் திட்டம் உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: தென்னிந்தியாவின் முக்கியமான இரண்டு நகரங்களை இணைக்கும் இந்த சாலை 3 மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த விரைவு சாலை கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுடன் சென்னை துறைமுகத்தை இணைக்கும் விதமாகவும் அமையவுள்ளது. இதன் மூலம் சென்னை பெங்களூரு இடையே சரக்கு போக்குவரத்து எளிமையாகவும், விரைவாகவும் நடைபெறும். மேலும் அனைத்து பகுதிகளையும் விரைவு சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

ஓசகோட்டே முதல் பெத்தமங்களா வரை 71 கி.மீ., பெத்தமங்களா முதல் குடிப்பலா வரை 85 கி.மீ., குடிப்பலா முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 106கி.மீ., ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை 22.6 கி.மீ என 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 262 கி.மீ. தூரத்திற்கு 162 பாலங்கள், 17 மேம்பாலங்கள், வாகனங்கள் உள்ளே வந்து வெளியே செல்ல 41 இடங்கள், பாதசாரிகளுக்கு 52 இடங்கள் உள்ளிட்டவை இந்த விரைவு சாலையில் உள்ளது. ஆங்காங்கே பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 23.2 கி.மீ., தூரத்திற்கு மேம்பால பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளில் பைரெட்டிபள்ளி முதல் பங்காருபாலம் வரை 31 கி.மீ., தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக சாலை பணிகள் எதிர்பார்த்த நேரத்தில் தொடங்கப்படவில்லை. இந்த கட்டத்தில் 14 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் பங்காருபாளையம் – குடிபாலா இடையிலான 29 கி.மீ. தூரத்திற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். மேலும் வாலாஜாபேட்டை முதல் குடிபாலா வரையிலான 24 கி.மீ. தூரத்திற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். இந்த விரைவு சாலைப்பணி அடுத்தாண்டுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 2 முதல் 3 மணி நேரத்தில் சென்றடையலாம்.
* இந்த விரைவு சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது, தமிழ்நாட்டில் 85 கி.மீ. நீளமும், ஆந்திராவில் 71 கி.மீ. நீளமும், கர்நாடகாவில் 106 கி.மீ. நீளமும் சாலை அமைகிறது.

You may also like

Leave a Comment

20 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi