Wednesday, May 29, 2024
Home » சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை: கிலோ ரூ.60க்கு கிடைக்கும் அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை: கிலோ ரூ.60க்கு கிடைக்கும் அமைச்சர் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்கப்படும். கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்த காரணத்தால், தமிழகத்துக்கு தற்போது தக்காளியின் வரத்து குறைந்துவிட்டது. அதனால் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட்டில் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரூ.120 முதல் ரூ.140 வரை இடத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிலோ ரூ.10க்கும் ரூ.20க்கும் விற்ற தக்காளி தற்போது ரூ.120க்கும் ரூ.140க்கும் விற்கப்படுவதால் குடும்ப பட்ஜெட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் கடந்த வாரம் முதல் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.100க்கும், சில்லறை விலையில் ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை, வரும் நாட்களில் உயரும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு, தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதற்கிடையே தக்காளி விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு சார்பில் கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறி இருந்தார். இந்நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. அதன் விலையை குறைக்கவும், விலை உயராமல் இருக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து துறையின் அதிகாரிகளுடன் கலந்து பேசி முதல்வருடன் ஆலோசனை பெற்று செயல்படுத்தி வருகிறோம். 5 நாட்களுக்கு முன் ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில், தக்காளி விலை உயர்வை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி 62 பண்ணை பசுமை விலை கடைகளில் வழக்கத்தைவிட கூடுதல் கொள்முதல் செய்து, ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், சில்லறை வியாபாரிகள் வெளிசந்தைகளில் சற்று கூடுதலாக வாங்கும் நிலை உள்ளது. தக்காளி விலை மேலும் உயராமல் தடுக்க, துறை ரீதியாகவும், உற்பத்தி செய்யும் விவசாயிகள், வணிகர்களிடம் பேசி இருக்கிறோம். இந்த நிலை மேலும் 10 நாள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட பருவமழை பொய்த்ததாலும், சில இடங்களில் தக்காளி சாகுபடி செய்த இடங்களில் கூடுதல் மழையால் அழிந்து போனதால் இந்த விலை உயர்வு என்று கூறினார்.

அதேபோன்று சென்ற ஆண்டு தக்காளி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காததால் இந்த ஆண்டு தக்காளி சாகுபடி செய்யாமல் பரப்பளவை குறைத்து விட்டதாகவும் அவர் கூறினார். இதனால் அகில இந்திய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யலாம் என்று ஒரு யோசனை உள்ளது. அதை நிறைவேற்றுவது குறித்தும் இன்று (நேற்று) ஆலோசனை நடத்தியுள்ளோம். முதல்கட்டமாக சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என 3 ஆக பிரித்து வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னை 25, தென்சென்னை 25 கடைகள் என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் 4ம் தேதி (இன்று) முதல் விற்பனையை தொடங்க உள்ளோம்.

அதேபோன்று சென்னையில் உள்ள 27 பண்ணை பசுமை கடைகளிலும் தக்காளி விற்பனை தொடரும். கூடுதலாக 2 நகரும் பண்ணை பசுமை கடை என மொத்தம் 111 கடைகளில் சென்னையில் ரூ.60 முதல் ரூ.70 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் தலைநகர் சென்னையில் இன்று விற்பனை தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளிலும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தக்காளி விலை உயர்வு என்பது சென்ற ஆண்டும் இருந்தது. இனி வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்னை வராமல் இருக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேவையானால் வேளாண் உற்பத்தி மையம் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய அந்த பொருட்களை தொடர்ந்து வாங்குவதற்கான முடிவை எடுக்க உள்ளோம். தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. சென்னையில் மட்டும் 111 கடைகளில் தக்காளி விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

அதேநேரம் விவசாய உற்பத்தியாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஓரிரு நாளில் நல்ல நிலை ஏற்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தக்காளி பயிரிடப்பட்டாலும், கூடுதல் தக்காளி வெளி மாநிலங்களில் இருந்துதான் தமிழகம் வருகிறது. அதனால் வரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழகத்திலேயே தக்காளி பயிரிட விவசாயிகளிடம் தோட்டக்கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி
சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளுக்கும், விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 50 கிலோ தக்காளி விற்பனைக்காக இன்று காலை 8 மணி முதல் அனுப்பி வைக்க டியுசிஎஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி மட்டுமே ரேஷன் கடைகளில் இன்று வழங்கப்படும். மொத்தமாக வாங்க முடியாது. விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேஷன் கடைகளில் கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக டியுசிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

11 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi