செங்கல்பட்டு: 2023ம் ஆண்டின் சுதந்திரத் தினத்தன்று வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள இளைஞர்கள் குறிப்பிட்ட வலைதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி, 15 வயது முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது ₹1 லட்சம் ரொக்கத் தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்நிலையில், நடப்பு 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவிருக்கிறது. இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக, தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கடந்த 1.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொண்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவர்களாக இருக்க வேண்டும். மத்திய-அரசு அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட எந்தவொரு நிறுவனத்திலும் வேலை செய்பவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களின் உள்ளூர் மக்களின் செல்வாக்கு, விருது பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
மேற்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை வரும் வரும் 31ம் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.