செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 5வது புத்தக திருவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 5வது செங்கை புத்தக திருவிழா-2023வை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு, அமைச்சர் அன்பரசன் ஒவ்வொரு புத்தக அரங்குகளாக சுற்றி பார்த்து புத்தகங்களை வாங்கினார். மேலும், துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பார்வையிட்டு, தோட்டக்கலை துறையின் சார்பாக பயனாளிக்கு தென்னங்கன்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழாவானது 28.12.2023 முதல் 4.1.2024 வரை நடைபெற உள்ளது. இதில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். இங்கு, 80க்கு மேற்பட்ட அரங்குகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.100 கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வீன், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.