பூந்தமல்லி: மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது: இந்தியா முழுக்க உள்ள சோதனை சாவடிகளை அகற்றவேண்டும் என்று ஒன்றிய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுவிட்டன. அதுபோல் தமிழகத்திலும் சோதனை சாவடிகளை அகற்றவேண்டும் என மாநில அரசுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென்னிந்திய மோட்டார் அசோசியேசன், லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மாநில சோதனை சாவடிகளில் வாகனங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றாலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 25ம்தேதி முதல் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய மாநில எல்லை சோதனை சாவடிகளில் பணம் செலுத்தமாட்டோம், லஞ்சம் கொடுக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தற்போது அனைத்து விதமான வாகனங்களுக்கான நடைமுறை ஆன்லைனில் வந்துவிட்டது. சோதனை சாவடிகள் தேவையற்றவை. ஆர்டிஓ செக்போஸ்ட் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஊழல் நடைபெறுகிறது. எனவே, இவற்றையும் அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.