திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் அமைந்துள்ளது. நேற்று ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தாணிப்பாறை கேட் பகுதியில் காத்திருந்த பக்தர்கள் பின்னர் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலை ஏறிய நிலையில், அதில் 10 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து விட்டு மலையிறங்கி விட்டனர். இதற்கிடையே இரவு 8 மணி அளவில் சுந்தரமகாலிங்கம் கோயில் 5வது பீட் பிலாவடி கருப்புசாமி கோயில் அருகே திடீரென காட்டுத்தீ பற்றி எரியத் துவங்கியது.
அப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலான காற்று வீசியதால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப தீ வேகமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மலைக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற 3,000 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆடி அமாவாசை அன்று அதிகளவில் பக்தர்கள் வந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.