சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த கோபி முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்பதற்காக அறங்காவலர் என்ற முறையில் கோபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அதனால் பாதிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போதிய விளக்கம் கேட்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தனது தரப்பு விளக்கத்தை அறநிலையத்துறையிடம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி 12 வாரங்களில் இறுதி உத்தரவை இந்து சமய அறநிலைய துறை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.