திருமலை: ஆந்திராவில் திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.279 கோடி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜிலென்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, சந்திரபாபு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின் பல இடங்களில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாயுடுவின் குப்பம் தொகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் அனைத்தும் ஓடவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக சேர்வது போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள கல்லூரிகளிலில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் காவல்துறை நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இயல்பு நிலைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே சந்திரபாபு கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த 6 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.