திருமலை: சந்திரபாபுவின் தேர்தல் அறிக்கை கர்நாடகாவில் இருந்து பிறந்துள்ளது. அவர் பதவிக்காக யாரையும் முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று முதல்வர் ஜெகன்மோகன் விமர்சனம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் ஒய்எஸ்ஆர் ரைத்து பரோசா- பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு முதலீட்டு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பயனாளிகளின் கணக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பணத்தை டெபாசிட் செய்தார். முன்னதாக பட்டிகொண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: சந்திரபாபு தனது மாமனாரான என்டிஆர் முதுகில் குத்தி வெற்றி பெற்றார்.
இப்போது ராஜமுந்திரியில் மாநாடு என்ற நாடகம் உருவானது. முதுகில் குத்தியவர் தற்போது யுகபுருஷர், ராமர், கிருஷ்ணர் என்று புகழ்ந்து வருகிறார். பதவிக்காக யாரையும் முதுகில் குத்தவும் சந்திரபாபு தயங்குவதில்லை. தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நமது தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் இருந்து பிறந்தது. சந்திரபாபுவின் தேர்தல் அறிக்கை கர்நாடகாவில் இருந்து பிறந்தது. கூட்டணிக்காக சந்திரபாபு எந்த எல்லைக்கும் வளைந்து கொடுப்பார்.
சந்திரபாபு ஆட்சியில் ஆண்டுதோறும் வறட்சி நிலவி வந்தது. அவரது ஆட்சியில் குறைந்தபட்சம் பாதி மண்டலங்கள் வறட்சி மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்போது மாநிலத்தில் வறட்சி இல்லை, இடம்பெயர்வு இல்லை. முந்தைய அரசின் ஆட்சிக்கும் உங்கள் பிள்ளையின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் மக்கள் உணர்ந்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.