சென்னை: மடிப்பாக்கம், சீனிவாசன் நகர், ராம் நகர் 4வது தெருவில் வசிக்கும் பாட்ரிகா பெல்லார்டு (71), கடந்த 16ம் தேதி ராம்நகர் 10வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பாட்ரிகா பெல்லார்டு கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். புகாரின்பேரில், மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (23), திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அசோக்குமார் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சவரன் செயின், குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர்கள் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறிவைத்து, நகைகளை பறித்து வந்தது தெரிந்தது.