காஞ்சிபுரம்: வாலாஜாபாத், குன்றத்தூர் ஒன்றியங்களில், 5 நட்சத்திர குறியீடு பெற்ற, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட தரச்சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையங்கள் எரிவாயு,
மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் இணைப்புகள் மற்றும் சுவர்கள் வண்ணம் பூசப்பட்டநிலையில், உள்காற்று வெளியில் செல்லும் வகையில் வெளியேற்றும் விசிறி அமைக்கப்பட்டிருத்தல் போன்ற 25 பொதுவான நடைமுறைகளை பூர்த்தி செய்து, 5 நட்சத்திரம் குறியீடு பெற்றதால், ISO 9001:2015 தரச்சான்றிதழ் 3 சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாறு, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்றுதழ்களை வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.