Wednesday, May 22, 2024
Home » கடலூர் அருகே மயானத்தில் மரங்களை நட்டு மரகதச் சோலையாக மாற்றிய விவசாயியை நேரில் அழைத்து பாராட்டிய தலைமை செயலாளர் இறையன்பு..!!

கடலூர் அருகே மயானத்தில் மரங்களை நட்டு மரகதச் சோலையாக மாற்றிய விவசாயியை நேரில் அழைத்து பாராட்டிய தலைமை செயலாளர் இறையன்பு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: மயானத்தில் மரங்களை நட்டு மரகதச் சோலையாக மாற்றிய நபரை நேரில் அழைத்து தலைமை செயலாளர் இறையன்பு பாராட்டினார். கடலூர் மாவட்டம் அரங்கூர் ஊராட்சியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவர் அங்குள்ள மயானத்தை, தனது சொந்த செலவில் மரங்கள், பூச்செடிகள் வைத்து பராமரித்து வரும் நிலையில், அவரை நேரில் அழைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதைப் பற்றி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருந்தார்.

அம்மரங்களையெல்லாம் 70 வயதான அர்ச்சுனன் என்பவர் நட்டு, பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் தெரிவித்திருந்தார். அரங்கூர் ஊராட்சியில் வசிக்கும் விவசாய தினக்கூலி அர்ச்சுனன் அவ்வூரில் அமைக்கப்பட்டிருந்த மயானக் கொட்டகையையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும், தன்னுடைய சொந்த செலவில் முற்புதரை அகற்றி, இடத்தை சமன் செய்து, மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் வைத்து, அழகாக பராமரித்து வரும் நற்பணியை செய்து வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், விவசாயக் கூலியாக இருந்தாலும், மயானத்தில் மரங்களை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய அர்ச்சுனன் என்பவரை தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டி அவருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். மேற்படி மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி, நன்றாகப் பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு நேர்முகக் கடிதமும் அனுப்பினார்.

You may also like

Leave a Comment

seven + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi