சென்னை: செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிவாரணம் கேட்ட 80 நரிக்குறவ குடும்பங்களுக்கு, சென்னையிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். அவர்களுடன் வீடியோ காலில் பேசியதில் உற்சாகம் அடைந்தனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குன்னமஞ்சேரியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்குள்ள, ஆரணி ஆற்றங்கரையில் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி ஆற்றங்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 80 குடும்பத்தினரும் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, புயல் கரையை கடந்து, வெள்ள நீர் வடியும் வரை அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தது. வெள்ள அபாயம் நீங்கிய பின் 80 குடும்பத்தினரும் கிராமத்திற்குள் மீண்டும் அனுப்பி தங்க வைக்கப்பட்டனர்.
நரிக்குறவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செல்போனில் பேசி நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்டு 80 குடும்பத்தினருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், டி.ஜெ.கோவிந்தராசன் எம்.எம்.ஏ நேற்றுமுன்தினம் இரவு அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கினார். பொருட்களை வழங்கி கொண்டிருந்தபோது, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் செல்பேசி வீடியோ காலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பு கொண்டு நிவாரண உதவி வழங்குவதை குறித்து கேட்டறிந்தார். அப்போது பயனாளிகளான நரிகுறவர்கள், வீடியோ காலில் அமைச்சர் பேசுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் நிவாரண பொருட்கள் வந்து சேர்ந்ததா என அமைச்சர் கேட்டார்.
அதற்கு நிவாரண பொருட்கள் பெற்று கொண்டோம் என்று அவர்கள் உற்சாகமாக நன்றி தெரிவித்தனர். அமைச்சர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.