புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவராக உள்ள டி.கே.சிவகுமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து சிபிஐயும் சிவகுமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் டி.கே.சிவக்குமார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவாது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,” உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், டி.கே.சிவக்குமார் தொடர்பான வழக்கை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.