பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கிமீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ளக்கெவி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
இந்த அருவியில் விடுமுறை மற்றும் கோடை காலங்களில், தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்வர்.கடந்த 3 மாதங்களாக மழை இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. கோடை விடுமுறைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், பல மணி நேரம் காத்திருந்து குறைந்த அளவு நீரில் குளித்து சென்றனர். நேற்றுமுன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நேற்று காலை நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.