பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே பிரான் கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் நாட்டு வகை மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, கண்மாய், குளம் குட்டைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மீன்கள் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சில இடங்களில் மீன்கிடைக்காத விரக்தியில் முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னமராவதி அருகே உள்ள பிதாவூர் பிரான் கண்மாய் மீன்பிடித்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருவிழாவையொட்டி கண்மாய்க்கரையில் சுவாமி வழிபாடு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் கரையில் நின்று வௌ்ளை வீசி மீன் பிடித்திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து தூரி, வலை, ஊத்தா, கச்சா போன்ற மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடித்தனர். இதில் விரால், சிலேப்பி, அயிரை, கெண்டை, குரவை போன்ற நாட்டு வகை மீன்கள் அகப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.