சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுபாஷ் (24). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்திற்கு மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா எதிர்ப்பு தெரிவித்து சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்து உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுபாஷ் தனது தங்கையான பத்தாம் வகுப்பு படிக்கும் ஹாசினியை (16) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது, அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மஞ்சுவின் தந்தை சந்திரன் வேன் மூலம் பயங்கரமாக மோதினார். பின்னர் வேனை அங்கே நிறுத்திவிட்டு சந்திரன் தனது மனைவி சித்ராவின் ஸ்கூட்டரில் ஏறி தப்பியோடி இருவரும் தலைமறைவாகினர். இந்த விபத்தில் ஹாசினி பலத்த காயம் அடைந்தார். சுபாஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த ஹாசினி கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் பதுங்கி இருந்த சந்திரன் மற்றும் சித்ராவை கைது செய்து சிறையில் அடைந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மாரனூர் பகுதியில் உள்ள சந்திரனின் விவசாயத் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இறந்த ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ₹6 லட்சத்திற்கான காசோலையை கோபி ஆர்டிஓ கண்ணப்பன் வழங்கினார்.